ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு மக்களின் பண்புநலன்கள் ஆகியவற்றை உணர்த்துவதே பண்பாடு. அவ்வகையில் உலகில் தோன்றிய அனைத்து பண்பாடுகளுக்கும் முன்னோடியாய்த் திகழ்வது நம் நாடே.
நம் நாட்டு பாரம்பரியம் தொன்மை வாய்ந்தது. நம்முடைய பழக்கவழக்கங்களும் செயல் முறைகளும் இயற்கையோடு இயைந்தவை. நம் நாட்டு உணவு முறைகள், உடைகள், கல்வி முறைகள் , பண்புகள், பழக்கங்கள் கண்டு மேல்நாட்டார் வியக்கின்றனர்.பல அறிஞர்களும் தாம் இயற்றிய நூல்களில் நம் தேசத்தின் பெருமைகளைக் கூறியுள்ளனர்.
ஒருவரை வரவேற்கும் பொருட்டு இரு கைகூப்பிவணங்குவதும், அன்போடு நல்நிமித்தம் கூறி அழைப்பதும், அவர்களை அன்போடு உபசரிப்பதும் நம் பழக்கம் ஆகும்.
இவை அனைத்திலும் முதன்மை பெறுவது குடும்ப முறையே .
குடும்ப உறவின் உன்னதம் அறிந்தே அயல்நாட்டவரும் நம் பாரம்பரியமுறையை பின்பற்ற விரும்புகின்றனர்.
இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என அறுசுவை உணவில் இருந்து உடுத்தும் உடைகள் வரை ஏராளம். இவை அனைத்திலும் தனிச்சிறப்பு மிளிர்கின்றது!
அனைத்து முறைகளும் ஏதோ ஒரு அறிவியல் நோக்கில் அமைந்துள்ளன. எத்தனை! எத்தனை!இவை எண்ணும் போதுதான் அனைவரிடத்திலும் வியப்பு எழுகின்றது.
நாம் திருமணத்தின் போது அணியும் அணிகலனான மெட்டி, மாங்கல்யம், நெற்றியில் வைக்கப்படும் செந்தூரம், உடுத்தும் புடவை என ஒவ்வொன்றிலும் அறவியல் காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
எந்த ஒரு தொழில் நுட்பமும் அன்றி இவை வடிவமைக்கப்பட்டதே வியந்து போற்றக் காரணம்.
மொழியால், மதத்தால், இனத்தால் வேறுபட்டு இருப்பினும் “இந்தியர்கள்” எனும் சொல்லால் ஒன்றுபட்டு உள்ளோம். நாம் தேசத்தையும் பண்பாட்டையும் தொடர்ந்து செழித்தோங்கச் செய்வோம்!
நன்றி!
